தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள் :-
குழந்தைக்கு
தாய்ப்பால் மற்ற உணவுகளைவிட ஒரு மேலான சத்துணவு ஆகும். தாய்ப்பால் கொடுப்பதால் பிள்ளை மற்றும் தாய் இருவரின் சுகாதார நலன்கள் பெருகும்.
•குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுப்பது மிகவும் நல்லது. அப்படி செய்வது அவசியமும் கூட, ஏனெனில் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு வயிறு மற்றும் குடல் உபாதைகள் வராமல் தடுக்கும். தாய்ப்பாலானது குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது மற்றும் மலச்சிக்கல் ஏற்படுத்தாது. தாய்ப்பால் குழந்தையின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிர்ப்பு தன்மையை பெருக்கும்.
•தாய்ப்பால் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதைத் தடுக்கும். ஏனெனில் தாய்ப்பாலானது மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் உள்சுவரில் நடு பாதுகாப்பு படலத்தை ஏற்படுத்துகிறது.
•பசும்பால் கொடுப்பது சில பிள்ளைகளுக்கு அலார்ஜி எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. பசும்பாலோடு ஒப்பிடும்போது தாய்ப்பால் கொடுப்பது 100 சதம் பாதுகாப்பானது.
•தாய்பபால் உட்கொள்ளும் பிள்ளைகள் மற்ற குழந்தையை விட உடற்பருமனால் சிறிதாகவே பாதிக்கப்படுகின்றன என சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் தாய்பபால் கொடுப்பதால் உடல் பருமனாவது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.
•தாய்ப்பால் கொடுப்பதால் லூக்கேமியா எனும் இரத்த சம்பந்தமான கான்சர் சர்க்கரை நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதை தடுக்கிறது.
•தாய்ப்பால் குழந்தையின் புத்திக்கூர்மையை மேலும் உயர்த்துகிறது என நம்பப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நல்ல பாசப்பிணைப்பு எற்படுகிறது. மேலும் தாய்ப்பாலில் குழந்தையின் மூலை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
•மற்ற தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களோடு ஒப்பிடும் போது குழந்தைபிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உடல்எடை குறைவு சீக்கிரம் ஏற்படுகிறது. உடல் எடை குறைவது தாய்ப்பால் கொடுக்கும் தாயின் மன அழுத்தத்தையும் மற்றும் பிள்ளைபேருக்குப்பின் ஏற்படும் உதிரப்போக்கையும் குறைக்க உதவுகிறது.
•குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் கொடுப்பதினால் பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகிறது என நம்பப்படுகிறது. நீண்ட நாட்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது மேற்க்கூறிய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு.
•தாய்ப்பால் கொடுப்பது வசதியானது, இலவசமானது (மிகவும் முறைப்படுத்தப்பட்ட, பாட்டில் உணவு மற்றும் பிறகுழந்தையின் அத்தியாவசிய தேவையான உயர்வகை உணவகளுடன் ஒப்பிடும் போது ) மற்றும் தாய்ப்பால் எல்லாவற்றிலும் சிறந்தது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்சேய் உறவில் நல்ல இணக்கத்தை ஏற்பட உதவிசெய்கிறது. தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் அந்த அணைப்பு பிள்ளைக்கு மிகவும் ஆறுதலையும் தேறுதலையும் ஏற்படுத்தும் ஒரு சிறந்த வழி.
தாய்ப்பாலூட்டலின் நன்மைகள் தாய்மார்களுக்கு:
* தாய்ப்பால் ஊட்டுவதால் உடலில் உள்ள கொழுப்புச் சத்துக் குறைந்து பிரசவத்திற்கு முன் ஏறிய உடல் எடை தானாகக் குறைந்துவிடும்.
* மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது
* தாய்க்கும் குழந்தைக்குமான அன்யோன்யம் அதிகரிக்கிறது
* பிரசவத்திற்கு பின் இருக்கும் பெருத்த வயிறும் தாய்ப்பால் ஊட்டுவதால் ஓரளவு கட்டுப்படும்
அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்காக
அலுவலகம் செல்லும் தாய்மார்களின் பெரிய பிரச்சனை குழந்தைக்கு பாலூட்டுவதும், வெகு நேரம் அலுவலகத்தில் இருப்பதால் பால் கட்டிக் கொள்வது அல்லது பால் கசிந்துக் கொண்டு ஆடையை நனைப்பது ஆகிய இரண்டுமே!
தாய்ப்பாலானது ஃபிரிட்ஜில் வைக்காமலேயே 5மணி நேரம் வரைக் கெடாமல் இருக்கும்….. அதனை ஃபிரிட்ஜில் வைத்தால் இன்னும் பாதுகாக்கலாம்…
இப்படி சேமிக்கப்பட்ட பாலை நாம் வீட்டில் இல்லாத போது நம் குழந்தைக்கு பாட்டி, தந்தை, குழந்த பராமரிப்பாளர் என குழந்தையோடு நெருங்கிப் பழகும் யார் வேண்டுமானாலும் புகட்டலாம்….
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மேனுவல் பிரஸ்ட் பம்ப் எனப்படும் கீழ்காணும் படத்தில் உள்ளக் கருவியை வாங்க வேண்டும்….
இந்தக் கருவியைப் பயன்படுத்தி காலை நீங்கள் அலுவலக்ம் செல்லும் முன்பு குழந்தைக்கு நன்கு பாலூட்டியதும் நீங்கள் நிறைய தண்ணீர் மற்றும் பால் குடித்துவிட்டு ஒரு 30நிமிடங்கள் கழித்து உங்கள் மார்பகத்தில் உள்ள பாலினை இந்த பம்ப் மூலம் எடுத்து வீட்டில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும், இது நீங்கள் வீட்டில் இல்லாத சமயம் குழந்தைக்குப் பயன்படும்
இதனை சேமித்து வைக்க குழந்தைக்கு பாலூட்டும் நான் டாக்ஸிக் பால் புட்டிகளையே பயன்படுத்தலாம்… இதனை ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாப்பதால் குழந்தைக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை!
எப்பொழுது தாய்ப்பால் கொடுக்க துவங்க வேண்டும்?
குழந்தை பிறந்த உடனடியாக தாய்ப்பால் கொடுக்க துவங்கிவிட வேண்டும். நன்கு ஈரத்துணியால் துடைத்து எடுக்கப்பட்ட குழந்தையை தாய் தன் மார்போடு அனைத்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் தாயின் மார்பிலிருந்து பால்சுரப்பதை தூண்டுவேதாடு தாய்க்கும் சேய்க்கும் இடையிலான பாசப்பினைப்பை ஏற்படுத்தும்.
ஏன் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க துவங்க வேண்டும்?
இதற்கு நான்கு முதன்மைக் காரணங்களுண்டு.
1. குழந்தை பிறந்த 30 லிருந்து 60 நிமிடங்களில் நன்கு இயல்பாக சுருசுருப்பாக இருக்கும்.
2. இந்த சமயத்தில் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மை மிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.
3. குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.தாய்ப்பால் கொடுக்க நல்ல வாய்ப்பு. சீம்பால் என்பது குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பிலிருந்து சுரக்கும் மஞ்சள் நிறமான சுரப்பு. இதில் முழுக்க குழந்தைக்கு தேவையான பாதுகாப்புப் பொருட்கள் உள்ளன. இப்பொருட்கள் குழந்தையை நோய் தாக்குவதிலிருந்து பாதுகாக்கிறது. இந்த சீம்பால் கிட்டதட்ட ஒரு நோய்தடுப்பு மருந்து போன்றது.
4. தாய்ப்பால் கொடுப்பது தாயின் மார்பகங்களில் வீக்கம் கண்டு, ஏற்படும் வலியைத் தடுக்கிறது. அதே போல் குழந்தை பேறுக்குப்பின் எற்படும் உதிரப்போக்கை குறைக்கிறது.
சிசேரியன் எனப்படும், அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தாயும், தாய்ப்பால் கொடுக்கலாம்.
இவ்வகை அறுவைசிகிச்சை தாய்பால் கொடுக்கும் தன்மையை பாதிப்பதில்லை
•இப்படிப்பட்டவர் குழந்தைப் பிறந்த (அறுவை சிகிச்சைக்குப்பின்) 4 மணி நேரம் கழித்து தாய்ப்பால் கொடுக்கலாம் அல்லது அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் அனஸ்தீசியா எனப்படும் மயக்கமருந்தின் விளைவுகளிலிருந்து சாதாரண நிலைக்கு திரும்பினவுடன் பால் கொடுக்கலாம்.
•படுத்தவண்ணமாக ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் அல்லது உட்கார்ந்த வண்ணமாக குழந்தையை தன் மார்போடு அணைத்துக் கொண்டு பால் கொடுக்களாம்.
•அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெறும் அனைத்து தாய்மார்களும் குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே பிறர் உதவியுடன் வெற்றிகரமாக தன் குழந்தைகளக்கு தாய்ப்பால் கொடுக்கின்றனர்.
எவ்வளவு காலம் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்?
பிரத்தியோகமாக முதல் ஆறுமாதங்கள் தாய்பால் கொடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தாய்ப்பால் தருவதை தொடரலாம்.
தாய்ப்பால் கொடுத்தபின் மார்பிலிருந்து தாய்ப்பால் கசிந்தால் என்ன செய்யவேண்டும் ?
இது பொதுவாக அணைத்து குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனை. இது தற்காலிகமான ஒன்று.
பால்கசிவு ஏற்படின் தாயானவள் தன் முழங்கை முட்டியினால் மார்பகங்களின் பக்கவாட்டில் அழுத்தம் செலுத்த வேண்டும். இப்படி செய்வதனால் பால் கசிவு ஏற்படுவதை குறைக்கிறது.
தாயானவள் உடல்நலக்குறைவாய் காணப்படும் போது தாய்பால் கொடுக்கலாமா ?
ஆம் கொடுக்கலாம், பெரும்பாலான நோய்கள் குழந்தையை பாதிப்பதில்லை. சொல்லப்போனால் டைபாய்டு, மலேரியா காய்ச்சல், எலும்புருக்கிநோய், மஞ்சள்காமாலை அல்லது தொழுநோய் போன்ற நோய்கள் பாதிக்கப்பட்டிருப்பினும் தாய்ப்பால் தருவதை நிறுத்த தேவையில்லை.
எப்பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது?
அம்மாவுக்கு சளி, ஜுரம் பிடித்து அதற்கான மருந்தை அவர் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். அதில் தவறெதுவும் இல்லை. காரணம், இன்று இதற்காக வரக்கூடிய பல மருந்துகள் பாதுகாப்பானவைகயாகவே இருக்கின்றன. ஆனால், தாய் எந்த மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும் (அது கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவர் பலமுறை பயன்படுத்திப் பழகிய மருந்தாக இருந்தாலும் கூட) டாக்டரின் ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்த முதல் சில நாட்களில் மார்பகக் காம்பில் (நிப்புள்) அம்மாவுக்குப் புண் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதனால் வலி ஏற்பட்டு சிலர் குழந்தைக்குப் பால் கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவிடுகிறார்கள். இப்படிச் செய்வது தவறு. தொடர்ந்து பால் கொடுக்கத் தவறினால் அம்மாவுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அதுவும் பெரிய அவஸ்தையாகிவிடும். இதனால் தாய்க்கு ஜுரம் கூட வரும். அதை கவனிக்காவிட்டால் அங்கு சீழ் உருவாகிவிடும் அபாயமும் உள்ளது.
இப்படி நீங்கள் விஷயத்தை சீழ் வரை எடுத்துச் சென்றால் அதற்கான ட்ரீட்மெண்ட் கொடுக்க, ஒரு சின்ன அறுவை சிகிச்சையேகூட செய்ய வேண்டி வந்துவிடலாம். அதனால் விஷயத்தை சீழ்வரை எடுத்துச் செல்லாமல் ஜாக்கிரதையாக செயல்படுங்கள். ஆனால் இந்த நிலையிலும்கூட அம்மா, பாப்பாவுக்கு இன்னொரு மார்பகத்தில் தொடர்ந்து பால் கொடுத்து வரலாம்.
இப்படிப் பால் கட்டிக்கொண்ட சமயங்களில் மார்பகத்தில் சுடூநீர் ஒத்தடம் கொடுத்து, கட்டிக்கொண்ட பாலைப் பீய்ச்சி எடுக்கவேண்டும். குழந்தைக்கு சரியான நேர இடைவெளிவிட்டு ஒவ்வொரு தரமும் பால் கொடுக்க வேண்டும். இப்படி பால் கொடுக்கும் நேர இடைவெளி அதிகமாகும் சமயங்களிலும் கூட சில சமயம் அம்மாவுக்குப் பால் கட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
அதேசமயம் புண்ணாகிவிட்ட நிப்புளை என்னதான் செய்வது? அந்த அவஸ்தைக்கு விடிவுதான் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது…
பாப்பாவுக்கு பால் கொடுக்காத நேரங்களில் நிப்புளில் வேஸலின் போன்ற க்ரீமைத் தடவி (டாக்டரிடம் ஆலோசனை பெற்ற பிறகு) வரலாம். பால் கொடுக்கும் சமயத்தில் மார்பகத்தை தண்ணீர் மற்றும் மைல்டான சோப்பு கொண்டு சுத்தம் செய்த பிறகு பாப்பாவுக்குப் பால் கொடுக்கலாம்.
குறைப் பிரசவத்தால் பிறந்த குழந்தைக்கு எப்படி பாலூட்டுவது?
ஒரு சில நேரங்களில் குழந்தை சரியாகப் பாலைக் குடிக்கத் தெரியாமல் திணறலாம். அல்லது நிப்புள் புண்ணாகிவிட்டது போன்ற சில சங்கடமான நேரங்களில் அம்மாவும் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல் போகலாம். இந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்வது?
மேலும் சில சமயங்களில் குழந்தை ஃப்ரீ மெச்சூராக அதாவது, டெலிவரிக்கான தேதிக்கு வெகுநாட்கள் முன்பாகவே பிறக்கும் என்று சொல்லி இருக்கிறேன். அந்தக் குழந்தைகளை தாயிடம் உடனே கொடுத்துவிடாமல் பெரும்பாலும் இன்குபேட்டர் பெட்டியில் வைத்துதான் பராமரிப்போம். இன்னும் சில குழந்தைகள் பிறக்கும் போதே உதடு பிளந்தது போன்ற (CLEFT LIP) நிலையில் பிறக்கலாம். இப்படி சில பிரச்னைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைக்கச் செய்ய இதோ ஒரு வழியிருக்கு..
இதுபோன்ற சமயங்களில் பாப்பாவுக்கு Expressed Milk கொடுக்கலாம்.
இது ஒன்றும் பெரிய விஷயமில்லை… தாய்ப்பாலைத் தாயிடமிருந்து வேறு வழிகளில் எடுத்துச் சேகரித்துக் கொடுப்பதுதான்.
இதை எப்படிச் செய்வது?
தாயின் மார்பகத்திலிருந்து பாலை ஒரு சுத்தமான பாத்திரத்தில் பீய்ச்சி எடுத்து பாப்பாவுக்குக் கொடுக்கலாம். அல்லது பாலை எடுப்பதற்கென்றே இன்று மார்க்கெட்டில் விற்கக் கூடிய பிரெஸ்ட் பம்புகள் வாங்கி அதைப் பயன்படுத்தியும் பாலைச் சேகரிக்கலாம்.
இந்த பிரெஸ்ட் பம்புகள் நாமே இயக்கக்கூடிய வகையிலும், பாட்டரியால் இயங்கக் கூடியதாகவும் இருவகையாகக் கிடைக்கின்றன. இப்படி எடுக்கப்படும் பாலை மூடிபோட்டு பத்திரப்படுத்தி வைத்துக் குழந்தைக்கு அவ்வப்போது கொடுத்துவரலாம்.
இந்தப் பாலை ஃப்ரிட்ஜில் (ஃப்ரீசரில் அல்ல..) 24_48 மணிநேரம் வரைக்கும் பத்திரப்படுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கலாம்.
இன்று தாய்ப்பாலை ஃப்ரீசரில் சுமார் மூன்று மாதங்கள் வரைக்கும் கூட ஃப்ரீஸ் செய்து வைத்து, அதன் தன்மை மாறாமல் பாப்பாவுக்குக் கொடுத்து வருகின்றனர்.
ஃப்ரிட்ஜிலோ ஃப்ரீசரிலோ வைத்து பத்திரப்படுத்திய பாலைப் பாப்பாவுக்கு எப்படி சூடுபடுத்திக் கொடுப்பது?
சேமிக்கப்பட்ட பாலை நேரடியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்கக் கூடாது. அகலமான ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதை லேசாக சூடுபடுத்தி, பால் இருக்கும் பாத்திரத்தை அதற்குள் வைத்து பதமாக சூடுபடுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கவேண்டும். அந்த சூட்டையும் விரல்விட்டெல்லாம் பார்க்கக்கூடாது.
ஃப்ரீஸ் செய்த பாலை முதலில் ஐஸ்கட்டி நிலையிலிருந்து கரையவிட்டுப் பிறகு மேற்கூறிய முறையிலேயே சூடுபடுத்திக் கொடுத்தால் போதும்.
பாலூட்டும் அம்மா எல்லாவற்றையும் சாப்பிடலாமா?
குழந்தை பிறப்பதற்கு முன் குழந்தைக்கு ஆகாது என்று சொல்லி ‘அதை சாப்பிடக் கூடாது… இதை சாப்பிடக் கூடாது’ என்று வீட்டுப் பெரியவர்கள் தடை விதிப்பது வழக்கம். குழந்தை பிறக்கும் வரையில்தான் இந்தக் கட்டுப்பாடெல்லாம் என்று நீங்கள் நினைத்தால்.. அதுதான் தவறு! குழந்தை பிறந்த பிறகுதான் இந்தக் கட்டுப்பாடுகள் இன்றுமே அதிகமாகும்..அம்மா இளநீர் சாப்பிட்டாலோ அல்லது எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ் குடித்தாலோ குழந்தைக்கு சளி இருமல் வர வாய்ப்புள்ளது என்பார்கள். பேரீச்சம் பழம் போன்ற சில விஷயங்கள் சாப்பிட்டால் பேதியாகும் என்பார்கள். இதெல்லாம் உண்மை இல்லை.அம்மா சாப்பிடும் எந்த விதமான உணவுமே பாப்பாவுக்கு நேரிடையாக. அதாவது, அதே உணவாகச் செல்வதில்லை. அந்த உணவெல்லாம் தாயின் உடலில் செரித்து கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து மற்றும் புரதச்சத்தாகப் பிரிந்து, பிறகு உடலால் கிரகிப்படுகிறது. இந்தச் சத்துக்கள்தான் பாப்பாவுக்குப் பாலாகக் கிடைக்கிறதே ஓழிய பாலிலிருந்து அவ்வளவு சுலபமாக எல்லாம் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடாது.
அம்மாவுக்கு சில சமயம் ஏதாவது நோய் தாக்கும்போது அது பாப்பாவுக்கும் பரவுவதற்குக் காரணம், இருவரும் எந்நேரமும் ஒன்றாகவே ஒரே அறையில் இருப்பதுதான்! மற்றபடி வேறொன்றும் இல்லை.
தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகம்! குறிப்பாக முதல் நான்கு தினங்கள் கொடுக்கும் சீம்பால், குழந்தைக்கு மூளைக்காய்ச்சல், போலியோ, வயிற்றுப்போக்கு, மலேரியா போன்ற எந்த நோய்களும் வராதபடி காக்கும் நோய்த்தடுப்பு ஆற்றலைக் கொண்டது!
தாய்ப்பாலில் கிருமிகள் இல்லை. அதனால் இதை ஃப்ரிட்ஜில் பதப்படுத்த வேண்டிய தேவை இல்லை.தாயின் மடியில் இருக்கும் குழந்தைக்கு மிகமிகச் சுலபமாக அதன் வாயருகிலேயே கிடைக்கும் இயற்கையான உணவு இது! தாய்ப்பால் கொடுப்பதால், அந்தப் பெண்ணுக்கு பிற்காலத்தில் மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைகிறது!
குழந்தைக்குப் பிரச்னை ஏற்படுத்தாத, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு தாய்ப்பால்.
தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்க்கு சொல்ல இயலாத ஒரு மன திருப்தியும், குழந்தைக்கு பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியும் உண்டாகிறது!
எப்படி தெரிந்து கொள்வது?
ஒரு குழந்தை எவ்வளவு பால் குடிக்கிறது. என்று யாரும் பார்க்க முடியாது! ஆனால் பால் குடித்தவுடன் நன்கு தூங்கினாலோ, ஆரோக்கியமாக இருந்தாலோ சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தாலோ குழந்தையின் எடை கூடினாலோ குழந்தைக்குத் தேவையான பால் கிடைக்கிறது என்று அர்த்தம்!
மகிழ்ச்சியாக பாலூட்டுங்கள்!
சில நேரங்களில் அம்மாக்களுக்கு ஏற்படும் டிப்ரஷன், எக்ஸைட்மெண்ட் போன்றவை பால் சுரப்பதைக் குறைத்துவிடும். ஆகவே குழந்தைக்கு பாலூட்டும் போது, ஒரு தாய் நன்கு வசதியாக அமர்ந்து எந்தவித மனக்குழப்பமின்றி மனதை நிம்மதியாக, மகிழ்ச்சியாக ஃபீல் செய்தபடி பாலூட்டுதல் அவசியம்.
சில குழந்தைகள், பால் குடித்து முடித்தவுடன் மார்புக் காம்பிலிருந்து வாயை எடுத்து விடும். ஆனால், சில குழந்தைகள் எடுக்காது.. அப்போது குழந்தைகளின் உதடுகளை மெதுவாக மார்பிலிருந்து நாம்தான் பிரித்து எடுக்க வேண்டும். சில குழந்தைகள், பால் அருந்தி முடித்த பின்னரும் கூட வெறுமனே மார்புக் காம்புகளைச் சப்பிக் கொண்டிருக்கும். அதற்காக வெடுக்கென்று குழந்தையைத் தாயின் மார்பிலிருந்து பிரிக்கப் கூடாது. குழந்தையின் வாய் ஓரமாக தாய் தன்னுடைய விரலை மெதுவாக வைத்துக் குழந்தையை மார்பிலிருந்து பிரித்தல் நல்ல முறையாகும்.
குறிப்பிட்ட சில மணிநேரங்களுக்கு ஒருமுறை பாலூட்டுவதைக் காட்டிலும் குழந்தை பசித்து அழும்போதெல்லாம் தாய்ப்பாலூட்டுதல் நல்லது.
சில நேரங்களில் குழந்தையின் துணிகள் ஈரமாகவோ, இறுக்கமாகவோ இருந்தாலும் குழந்தை அழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதனால் அழுகைக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு பசியால்தான் அழுகிறது எனத் தெரிந்தவுடன் பால் கொடுப்பது நல்லது.
பாலூட்டும் போது இரு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி பாலூட்டுவது அவசியம். இல்லையெனில் ஒரு பக்கம் மட்டும் பால் கட்டிக் கொள்ளும்!
குழந்தை வளர வளர 3 அல்லது 4 மணிக்கொருமுறை தாய்ப்பால் அருந்த பழகிக் கொள்ளும். பிறகு அதற்கு ஏற்ப பால் கொடுக்கலாம்!
எதை கட்டாயம் சாப்பிட வேண்டும்?
அதிகப் புரத உணவுகள், பயறு வகைகள், பால், முட்டை, தினமொரு கீரை, பழங்கள் போன்றவை சாப்பிட வேண்டும்! வெள்ளைப்பூண்டும், சுறாப்புட்டும் அதிகம் எடுத்துக் கொண்டால் பால்சுரப்பது அதிகமாகும்.
கிழங்கு வகைகள் நல்லதுதான் என்றாலும் குறைவாக சாப்பிடவும். அதிகம் சாப்பிட்டால் குழந்தைக்கு மாந்தம் வரும்!
எதை சாப்பிடக்கூடாது?
அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெயில் பொரித்தவை மற்றும் செயற்கை நிறங்கள் மற்றும் ரசாயனக் கலவை சேர்த்த உணவுகளை… குறிப்பாக குளிர்பானங்களைத் தவிர்க்கவும்.
கடைகளில் வாங்கும் பிரியாணி மற்றும், சிக்கன் 65 போன்ற அயிட்டங்கள், அதிக குளிர்ச்சி தரும் உணவுகளும் கூடாது… சீதாப்பழத்தைசுத்தமாகத் தவிர்க்கவும்.
இதை நல்லா கேட்டுக்கோ மம்மீ!
குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாய்ப்பால் கொடுக்க வேண்டும்! குறிப்பாக முதல் சீம்பாலை வீணாக்கவே கூடாது!
படுத்துக் கொண்டு பால் கொடுப்பது நல்லதல்ல. இதனால் குழந்தைக்குப் புரையேறி சமயங்களில் ஆபத்தாகக் கூட முடிந்து விடும்! தவிர இதனால் குழந்தையின் காதில் சீழ் வடியவோ, எறும்பு நுழையவோ வாய்ப்பிருக்கிறது.
குறைந்த பட்சம் 6 மாதங்களுக்காவது குழந்தைக்கு தாய்ப்பால் தரவேண்டும். ஒரு வருடம் தருவது நார்மல்!
மனநோயால் பாதிப்படைந்த பெண் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு பாதிப்பு ஒன்றும் ஏற்படாது.
தாய்ப்பாலில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டின், கொழுப்புச்சத்து, கார்போ ஹைட்ரேட் போன்ற அனைத்துவகையான உயிர்ச் சத்துக்களும் உள்ளன. அதனால் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் மட்டுமே குழந்தைகள் பல பாதிப்புகளைச் சந்திக்க வேண்டி வரும்!
குழந்தையின் பசித் தேவையை அறிந்து அது அழும் போதெல்லாம் அவ்வப்போது தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். காரணம், அதன் வயிறு மிகச் சிறியது. அதற்கு அடிக்கடி பசிக்கும்.
யாரெல்லாம் பாலூட்டக் கூடாது?
மார்பகப்புற்று நோய் உள்ளவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.
எய்ட்ஸ், எச்.ஐ.வி. பாஸிட்டிவ் ஹெபடைட்டிஸ் ஏ, ஹெபடைட்டிஸ் பி. தொழுநோய், காலரா, வெறிநாய்க்கடியால், ரேபிஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகப்படியான காய்ச்சலில் அவதிப்படுபவர்கள் ஆகியோரும் குழந்தைக்கு தாய்ப் பால் தரக்கூடாது.
தாய்ப்பால் சுரக்க
குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்க என்ன செய்ய வேண்டும். இதோ சில குறிப்புகள்
வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் ஒரு வேளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் ஈஸ்ுட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது பெருக்குகிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.
மேலும் தினமும் சுமார் 5 அல்லது 6 கப் பால் உட்கொண்டால் தாய்ப்பால் பற்றாக் குறையே இருக்காது.
தாய்ப்பால் நன்கு சுரக்க முருங்கைக் கீரையும், பசலைக் கீரையும் உதவும்.
கேள்வரகை நன்றாக இடித்து மாவாக்கிக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு வெல்லமும், எள்ளும் கலக்கவும். இதை தினமும் காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு வர, தாய்ப்பால் அதிகளவில் சுரக்கும். அதோடு, உடம்பும் ஆரோக்கியமாக இருக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கான சிறந்த உணவுகள்
1. முருங்கைக்கீரை – இதை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிடலாம், ஆனால் இந்த கீரை சரியான முறையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லையேல் வயிற்றுவலி வரக்கூடும்.
2. மீன், பால் சுறாப்புட்டு மிகச்சிறந்த உணவு, இதுவும், செய்த அன்று சாப்பிடுவது நல்லது, வைத்திருந்து சாப்பிடக்கூடாது குறிப்பாக பால் கொடுக்கும் பெண்கள்.
3. கீரை வகைகள் அத்தனையும் சாப்பிடலாம்.
4. பசும்பால் குறைந்தபட்சம் 500 மிலி குடிக்கவேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தளருமா?
தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் சரிவதில்லை. பாலூட்டும்போது ப்ரா அணியாமல் இருந்திருக்கலாம். சில தாய்மார்கள் வெறும் நைட்டி மட்டும் போட்டு உள்ளே ப்ரா அணியாமல் விடுகின்றனர். இதனால் தான் வெகு விரைவாக மார்பகங்கள் சரிந்து விடுகின்றன. இதற்கு க்ரீம், மாத்திரை, மருந்து எதுவும் பலனளிக்காது. மாறாக அவை சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தக்கூடும்.
பிளாஸ்டிக் சர்ஜரி மட்டுமே நிரந்தரத் தீர்வு. ஆனால் அதற்கு அதிக செலவாகும். தோற்றத்தை சரிப்படுத்த வேண்டுமானால், கம்பிகள் பொருத்தப்பட்ட ப்ரா கிடைக்கிறது. அதை உபயோகிக்கலாம். காம்புகளைச் சுற்றி ஏற்படும் சுருக்கத்திற்கு தோலில் போதுமான எண்ணெய்ப் பசை இல்லாததே காரணம். விக்விட் பாரஃபி எண்ணெய் நல்ல பலனளிக்கும். இதை காலையும் மாலையும் காம்புகளைச் சுற்றித் தடவினால் நாளடைவில் சுருக்கம் மறையும்.
No comments:
Post a Comment