விடாது மழை பெய்துகொண்டிருந்த
அந்த டிசம்பர் 1-ம் தேதி இரவில்,
சென்னையில் பெரும்பாலானவர்கள் `சற்றே அதிகமாகப் பெய்யும்
சாதாரண மழை' என்றுதான் நினைத்திருப்பார்கள்.
அடுத்த நாள் தங்கள் வாழ்க்கையைப்
புரட்டிப்போடும் வெள்ளத்துக்கு அது முன்னோட்டம் என்பதை,
பலரும் உணர்ந்திருக்க மாட்டார்கள். அப்படி உணராதவர்களில் ஈக்காட்டுத்தாங்கல்
டிஃபென்ஸ் காலனியில் வாழ்ந்த தம்பதியும் அடக்கம்.
72 வயது கர்னல் வெங்கடேசனும்
அவரது மனைவி கீதாவும் அப்படித்தான்
நினைத்தார்கள். வெள்ளம் வரத் தொடங்கியபோது
சாதாரணமாகவே அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். அதன் அபாயத்தை
உணர்ந்தபோது அவர்களால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடிய வில்லை. வீட்டைவிட்டு
வெளியே வந்தால்தான் மாடிக்குச் செல்ல முடியும் என்ற
நிலையில், அதற்குப் பயந்து வீட்டுக்கு உள்ளிருந்தே
அபயக்குரல் எழுப்பியபடி டைனிங் டேபிள், பின்னர்
அதற்கு மேல் சேர் என
ஏறி நின்று கொண்டிருந்தவர்களை, 9 மணி நேரப்
போராட்டத்துக்குப் பிறகு வெள்ளம் காவுகொண்டது.
எல்லைப் போராட்டத்தில் மீண்ட உயிர், சென்னையின்
வெள்ளப் போராட்டத்தில் பலியானது.
பள்ளிக்கரணையில் இருந்து சர்வதேசக் கருத்தரங்கு
ஒன்றுக்காகக் கிளம்பிய தம்பதி, விமானம் ரத்து
ஆனதால் வீடு திரும்ப, அவர்கள்
வீட்டுக்குச் சேரும் முன்னரே வெள்ளம்
அடித்துச் சென்றுவிட்டது. மழைக்குப் பயந்து பாதுகாப்பான வீடுகளுக்குச்
சென்றவர்களில் பெரும்பாலானவர்கள், வெள்ளத்தில் மிதந்த ஒரு பிணத்தையாவது
நடுக்கத்துடன் பார்த்தபடிதான் கடந்தார்கள். இப்படி செம்பரம்பாக்கம் ஏரியில்
இருந்து திறந்துவிடப்பட்ட நீர், மழைநீரோடு மக்கள்
கண்ணீரும் சேர்ந்து உருவானதுதான் டிசம்பர் 2-ம் தேதியின் பெரு
வெள்ளம்.
இது கையாள முடியாத
பெருமழையா?
`அளவுக்கு அதிகமான மழை வரும்'
என வானிலை ஆய்வு மையம்
சொன்னாலும், `50 செ.மீ மழை
பெய்யும்' எனக் கணக்கிட்டுச் சொல்லவில்லை'
எனக் குற்றம்சாட்டுகிறார் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர். ஆனால்,
நவம்பர் 30-ம் தேதியே சென்னையிலும்
சுற்றுப்புறத்திலும் 50செ.மீ மழை
பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லியிருக்கிறது பி.பி.சி
வானிலை அறிக்கை.
சென்னையின் நீர் ஆதாரங்களான பெரும்பாலான
ஏரிகள், தீபாவளிக்கு முன்னர் வரை கிட்டத்தட்ட
காலியாக இருந்தன. ஆனால், நவம்பர் இறுதியில்
அவை கிட்டத்தட்ட முழுமையான கொள்ளளவை அடைந்தன. இந்த
நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் 22 அடிக்கு
இருந்தது. ஏரியின் கொள்ளளவே 24 அடிதான்.
அந்தச் சமயத்தில் ஏரியில் இருந்து அடையாறுக்கு
வெளியேற்றப்பட்ட நீரின் அளவு விநாடிக்கு
900 கன அடி என்கிறது அதிகாரபூர்வத்
தகவல். பிறகு, டிசம்பர் 1-ம்
தேதி கனமழை தொடங்கியபோது செம்பரம்பாக்கம்
ஏரி 3,396 மில்லியன் கன அடியை அடைந்தது.
ஏரி உடைந்துவிடும் என்ற அச்சத்தில், பொறியாளர்கள்
அன்றிரவு 10மணிக்கு விநாடிக்கு 29,000 கன
அடி நீரைத் திறந்தார்கள். ஆனால்,
அதற்கு சில மணி நேரங்களுக்கு
முன்னர் சென்னை மாவட்ட ஆட்சியரிடம்
இருந்து வந்த அறிவிப்பில் விநாடிக்கு7,500
கன அடி வரை அதிகரிக்க
வாய்ப்பு உள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
அரசின் ஒவ்வோர் அறிவிப்பிலும்
ஓர் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், `செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்
வெளியேற்றப்பட்டதில் எந்த நிர்வாகக் குழப்பமும்
இல்லை'என்கிறார் தலைமைச் செயலாளர். ஆனால்
மின் துறை, காவல்
துறை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த
துறைகளுக்கு தகவல் தரப்படவில்லை. கரையோர
மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகூட
தரப்படவில்லை.
ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகள்...
சென்னையில் இருந்த 40-க்கும் அதிகமான ஏரிகள்,
சதுப்பு நிலங்கள், ஆறுகள், கால்வாய்களை ஆக்கிரமித்ததன்
விளைவுதான் இந்த வெள்ளம். சென்னையில்
நீங்கள் எந்த முக்கியத்துவம் வாய்ந்த
இடத்தை எடுத்துக்கொண்டாலும், அதன் பிரமாண்டத்துக்குப் பின்னால்
ஒரு நீர்நிலையின் மரணம் இருக்கும்.
சோழிங்கநல்லூர் குளோபல் மருத்துவமனை, மிகப்
பெரிய சதுப்பு நிலத்தில் அமைந்துள்ளது.
சென்னையின் மிகப் பெரிய மால்களில்
ஒன்றான ஃபீனிக்ஸ் மால், வேளச்சேரி ஏரியில்
அமைந்துள்ளது. எம்.ஆர்.டி.எஸ் பறக்கும் ரயில்,
பக்கிங்காம் கால்வாயைப்
பாதி அடைத்துக்கொண்டு ஓடுகிறது. மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரை திட்டமிடப்பட்டிருக்கும் பறக்கும் சாலை
கூவம் ஆற்றுக்குள் செல்ல இருக்கிறது. பெரும்பாலான
கல்வி நிறுவனங்கள், ஐ.டி பார்க்குகள்
பலவும் ஏரிகளை ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள்ளன.
அவ்வளவு ஏன்? `நீரின்றி அமையாது
உலகு' என பாடிய வள்ளுவனுக்கே,
ஏரியை அழித்துத்தான் வள்ளுவர்கோட்டம் கட்டியிருக்கிறோம்.
சென்னைக்குள் பாய்ந்த வெள்ள நீர்
என்பது, சென்னையில் மட்டும் பொழிந்த மழையால்
வந்தது அல்ல. சென்னை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களின்
வெள்ள நீர் இது. அழித்த
நீர்நிலைகள்போக இன்னும் 3,600 நீர்நிலைகள் இந்த மூன்று மாவட்டங்களில்
இருப்பதாகச் சொல்கிறார், சென்னை வளர்ச்சி மற்றும்
ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் ஜனகராஜன். அவற்றைத் தூர்வாரி ஒழுங்காக முழுக் கொள்ளளவைப் பராமரித்தால்
30 டி.எம்.சி தண்ணீர்
நமக்குக் கிடைக்கும். இதே செம்பரம்பாக்கம் ஏரியை
நாம் முறையாகத் தூர்வாரிப் பராமரித்திருந்தால், அங்கே இருந்து நீரைத்
திறந்துவிடும் தேவையே ஏற்பட்டு இருக்காது.
சுருங்கிவிட்ட வடிகால்கள்...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 29,000 கன
அடி நீர் திறந்துவிட்டதாகத்தான் அரசு சொல்கிறது.
இது உண்மையான
எண்ணிக்கையா, திறந்துவிடப்பட்டது இதைவிட அதிகமா என்ற
சந்தேகங்களை ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால் நிச்சயம் விநாடிக்கு 29,000 கன அடி நீரைத்
தாங்கும் திறன் அடையாறுக்கு உண்டு.
2005-ம் ஆண்டு இதே அடையாற்றில்
விநாடிக்கு 55,000கன அடி நீர்
சென்றுள்ளது. அடையாறு மலர் மருத்துவமனை
அருகே 250 மீட்டராக
இருக்கும் அடையாறு ஆற்றின் அகலம்,
சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம்
அருகில் வெறும் 50மீட்டராக இருக்கிறது. இதைப்போலதான் கொசஸ்தலை ஆறும். அதன் கொள்ளளவு
1,25,000கன அடி. இப்போது வந்ததோ
90,000 கன அடி மட்டுமே. அதன்
அகலம் 50 மீட்டர் சுருங்கியதன் விளைவு
25,000 கன அடி நீர் வெள்ளமாக
மாறி திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளை வெள்ளக்காடாக
மாற்றியது. கூவம் ஆற்றின் கொள்ளவு
21,000 கன அடி. இப்போது அதில்
சென்றது வெறும் 13,000 கன அடி மட்டுமே.
பிறகு ஏன் எம்.எம்.டி.ஏ காலனியும்
அரும்பாக்கம் பகுதிகளும் வெள்ளக்காடாக மாறின? ஏனென்றால் கூவம்
ஆற்றில் 60 சதவிகிதம் சேறு உள்ளதாக பொதுப்பணித்
துறை அறிக்கை சொல்கிறது.
கொசஸ்தலை ஆறு கடலில் சென்று
கலக்கும் எண்ணூர் கழிமுகம் 120 மீட்டர்
அகலம் கொண்டது. கூவம் கடலில் கலக்கும்
நேப்பியர் பாலத்தின் அருகில் அது 150 மீட்டர்
அகலம் கொண்டது. அடையாறு கடலில் சென்று
கலக்கும் பட்டினம்பாக்கத்தில் அடையாற்றின் அகலம் 300 மீட்டர். இதில் எண்ணூரிலும், நேப்பியர்
பாலத்தின் அருகிலும் துறைமுகங்களில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும்
மண் சேர்ந்து, ஆற்றின் ஆழத்தை வெகுவாகக்
குறைத்துவிட்டது. இதனால் ஆற்றுநீர், வேகத்துடன்
கடலில் சென்று கலக்க முடியவில்லை. இந்த இரண்டு ஆறுகளின்
முகத்துவாரத்தைத் தொடர்ந்து தூர்வாரி வைத்திருந்தாலே பிரச்னை பாதியாகக் குறைந்து
இருக்கும்!
சென்னையின் இரண்டாவது மாஸ்டர் பிளானில் நீர்நிலைகள்
பற்றியோ, வடிகால் முறைகள் பற்றியோ
ஒரு தகவலும் இல்லை. வழக்கமாக
மாஸ்டர் பிளானில் வெள்ள நீர் வடிகால்,
கழிவுநீர் கால்வாய் உள்ளிட்டவற்றின் வரைபடம் இருக்கும். ஆனால்,
சென்னையுடன் புதிதாகச் சேர்க்கப்பட்ட சோழிங்கநல்லூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கான கழிவுநீர்
வடிகால் வரைபடமே அதில் இல்லை.
இந்த அடிப்படை விஷயம்கூட இல்லாத மாஸ்டர் பிளானை
வைத்துக்கொண்டு, எப்படி உங்களால் ஒரு
பெரிய நகரத்தைப் பராமரிக்க முடியும்? சென்னையில் எஞ்சியுள்ள சுமார் 150 நீர்நிலைகளைப் பாதுகாக்கக்கூட எந்தத் திட்டமும் அரசிடம்
இல்லை.
சென்னையின் மக்கள்தொகை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. ஆனால், இவ்வளவு ஜனத்திரளின்
கழிவை 40 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட கழிவுநீர்
அகற்றும் முறை மூலம் எப்படி
வெளியேற்ற முடியும்? பிரச்னையான நேரங்களில் கழிவுநீரை மழைநீர் வடிகாலில் விடுகிறார்கள்.
அதனால் கழிவுநீரும் வடியாமல், மழைநீரையும் வடியவிடாமல் செய்கிறது. இந்த ஒழுங்கற்ற முறையைச்
சரிபடுத்தாத வரையில் சென்னைக்கு விடிவுகாலம்
சாத்தியமே இல்லை.
மழை நீர் சேமிப்பு
மழைநீர் தேங்காமல் வடிய,
சாலைகளில் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நடைபாதையின் கீழே உள்ள அவை,
மேட்டில் இருந்து பள்ளத்தை நோக்கி
வழிந்தோடும்படி இல்லாமல், சமமாக அமைக்கப்பட்டுள்ளன. இப்படி
இருந்தால் தண்ணீர் எப்படி வடியும்?
தவிர, வடிகாலையே ஒரு வீடுபோல் நான்கு
பக்கமும் சிமென்ட் கலவை வைத்து கட்டுகிறார்கள்.
அப்படி இல்லாமல் மேற்புறமும் பக்கவாட்டிலும் காங்கிரீட் கலவையால் கட்டிவிட்டு, நிலம் நீரை உறிஞ்ச
வசதியாக,தரையில் சிமென்ட் கலவை
போடாமல் விட வேண்டும். நீர்,
நிலத்தால் உறிஞ்சப்படுவதன் மூலமும் மழைநீரைச் சேமிக்கலாம்.
அந்த வடிகாலில் ஒவ்வொரு
50 மீட்டர், 100 மீட்டருக்கு ஓர் இடத்தில் கால்
அடி, அரை அடியில் சின்னச்சின்னத்
தடுப்புகளை ஏற்படுத்தலாம். அதில் தேங்கும் நீர்,
நிலத்தால் உறிஞ்சப்படும். அந்தத் தடுப்புகளையும் தாண்டி
உயரும் நீர் தானாக வழிந்தோடிவிடும்.
இப்படி வடியும் மழை நீரைக்கூட,சென்னையில் உள்ள பல்வேறு பூங்காக்களுக்கு
நடுவே குட்டைகளை ஏற்படுத்தி அதில் விடலாம். இதையும்
தாண்டி வடியும் வெள்ள நீரை,
கடலில் கலக்கச்செய்யலாம். ஆனால், ஒவ்வொரு வீடு,அரசு அலுவலகங்களிலும்
மழைநீர் சேகரிப்பு என்பது கட்டாயமாகும்போதுதான் இது சாத்தியம்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ளதுபோல் தண்ணீரை உறிஞ்சக்கூடிய சாலைகளை
அமைப்பது குறித்தும் பரிசீலிக்கலாம். அது அதிகச் செலவு
பிடிக்கக்கூடியது என்றாலும், அது சாத்தியமானால் ஒட்டுமொத்த
சாலைகளுமே மழைநீர் சேகரிப்புப் பைகளாக
மாறும்; வெள்ளமும் குறையும்.
நகர கட்டமைப்பு
`இவ்வளவு பேரைத்தான் தாங்கும்’
என்ற தாங்குதிறன்
ஒவ்வொரு நகருக்கும் உண்டு. பரப்பளவு,உணவு
தரும் சக்தி, தண்ணீர் வசதி,
கழிவுநீர் அகற்றம் போன்ற பல
அம்சங்களைப் பொறுத்து அது அமையும். சென்னை,
தன் அதிகபட்சத் தாங்கு திறனைவிட இரு
மடங்கு மக்கள்தொகையைக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம், ஒரே இடத்தில்
குவிக்கப்பட்ட பொருளாதார உற்பத்தி முறை. ஃபோர்டு, ஹூண்டாய்,
பி.எம்.டபிள்யூ என
பன்னாட்டு நிறுவனங்கள் இயங்குவது சென்னையில் இருந்துதான். ஃபோர்டை ராமநாதபுரத்துக்கும், ஹூண்டாயை புதுக்கோட்டைக்கும்,பி.எம்.டபிள்யூவை
நாமக்கல்லுக்கும் மாற்றினால், இதில் பாதிப் பிரச்னைகள்
குறையும்; ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்கும்
அது உதவும். அனைத்துத் தொழில்களையும்
சென்னையிலேயே அமைக்க ஊக்குவிப்பது ஏன்?
ஏராளமான ஐ.டி
கம்பெனிகள் சென்னயிலேயே உள்ளன. குறிப்பாக ஓ.எம்.ஆர் சாலை
ஐ.டி நிறுவனங்கள்
இரண்டரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
தருவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இதே இன்டர்நெட் கனெக்டிவிட்டி
தொழில்நுட்பத்தை தென்காசி யிலும் மதுரையிலும் திருநெல்வேலியிலும்
கொடுத்தால், அவர்கள் அங்கு தொழில்களைத்
தொடங்க ஏதுவாக இருக்கும். சென்னைக்கும்
இந்த அளவுக்கு அழுத்தம் இருக்காது. இந்த ஒரு வார
மழைக்கு 60 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக
ஐ.டி கம்பெனிகள்
சொல்கின்றன. தொழிலை தமிழ்நாடு முழுவதும்
நிரவிப் பரவலாக்கினால், மக்களும் ஒரே இடத்தில் குவிய
மாட்டார்கள்; இழப்பும் தவிர்க்கப்படும்.
பிளாஸ்டிக் கழிவுகள்...
ஊர் எங்கும் குவிந்துகிடக்கும்
குப்பைகள் குறித்து அனைவரும் பேசுகிறோம். ஆனால், அவற்றை உருவாக்கியதில்
நம் அனைவருக்கும் பங்கு உண்டு. இன்று
சென்னையில் ஒரு நாளைக்கு சுமார்6,000
டன் குப்பை உற்பத்தியாகிறது. இது
மாநகராட்சியின் தகவல். உண்மை நிலவரம்
இதைவிட இன்னொரு மடங்கு இருக்கும்.
இவ்வளவு குப்பைகளையும் கொடுங்கையூரிலும் பள்ளிக்கரணையிலும் கொட்டுகிறார்கள். அப்படி பள்ளிக்கரணையை அடைத்ததால்தான்,வேளச்சேரியும் மடிப்பாக்கமும் மூழ்கின. குப்பையை `மக்கும், மக்காத குப்பை எனப்
பிரித்துத் தர வேண்டும்’ என்ற
உத்தரவு ஏற்கெனவே உள்ளது. ஆனால், நடைமுறையில்
அது சிறு சதவிகிதம்கூடச் செயல்பாட்டில்
இல்லை. ‘எங்கு குப்பை உற்பத்தியாகிறதோ,
அங்கேயே மக்கும் மக்காத குப்பை
எனப் பிரித்துக் கொடுத்தால் தவிர, குப்பையை வாங்க
மாட்டோம்’ எனச் சொல்லி,அதைக்
கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
சென்னை புரசைவாக்கத்தில் ஒரு
வார்டில் மக்கும் குப்பையை மறுசுழற்சி
செய்து, அதன் மூலம் மின்சாரம்
தயாரித்து, தெரு விளக்குகளை எரியவைக்கிறார்கள்.
அதை ஓர் உதாரணமாகக் கொண்டு
குப்பைக்கு எனத் தனியாக ஒரு
செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
இனி தாக்குப்பிடிக்குமா சென்னை?
இந்த மழைக்கும் வெள்ளத்துக்கும்
நிலைகுலைந்திருக்கிறது சென்னை. `இனி பருவநிலை மாற்றத்தால்
இப்படி அடிக்கடி நிகழலாம்’ என்கிறார்கள் வல்லுநர்கள். சென்னை இனி தன்னை
அதற்குத் தயார் செய்துகொள்ள வேண்டும்.
அரசு அளவில் நீர்நிலைகள் பாதுகாப்பு,
வடிகால் முறைகள் போன்றவை மிக
வேகமாக முறைப்படுத்தப்பட
வேண்டும். குப்பை மேலாண்மை,மழைநீர்
சேகரிப்பு போன்ற திட்டங்கள் உறுதியுடன்
செயல்படுத்தப்பட வேண்டும்.
முக்கியமாக,அவசரமான பிரச்னை களில்
துரிதமாக முடிவெடுக்கவும் உடனடியாக செயல்படவுமான திறன் அரசுக்கு வேண்டும்.
இந்தத் திறன் இல்லாத அரசு,
இந்தப் பேரிடரை அல்ல... எந்தப்
பேரிடரையும் சமாளிக்க முடியாது.
அதேநேரம் பொதுமக்களாகிய நாம் செய்ய வேண்டிய
சில செயல்களும் உள்ளன. இனியாவது நாம்
நீர்நிலையில் வீடு கட்டுவது இல்லை
என்பதை உறுதிசெய்வோம். குப்பை மேலாண்மையில் நமது
பங்கைத் தட்டிக்கழிக்காமல் செயல்படுத்துவோம். பிளாஸ்டிக் உபயோகத்தைச் சாத்தியமான அனைத்து இடங்களிலும் தவிர்ப்போம்.
`எல்லாம் அரசு பார்த்துக்கொள்ளும்' என்ற
மனப்போக்கில் இருந்து விடுபடுவோம். இனியாவது
தனிநபர்களாக சமூகத்துக்கு ஆற்றவேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்வோம்.
`அடுத்த வீட்டில் இருப்பவர்
செய்வார்’ என நாம் விடலாம்.
ஆனால், வெள்ளம் அடுத்த வீட்டில்
இருப்பவரை மட்டும் அடித்துச் செல்வது
இல்லை. இந்த வெள்ளப் பணிகளில்
பொதுமக்களின் பங்களிப்பு அற்புதமானது. இந்தப் பங்களிப்பை நாம்
இந்த வெள்ள இடர் தீர்ந்த
பிறகும் செலுத்துவதன் மூலம் மட்டுமே, இன்னொரு
பேரிடர் வந்தாலும் இந்தப் பாதிப்பு வராமல்
நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.
வெள்ளம், நமக்கு நிறையப் படிப்பினைகளைத்
தந்திருக்கிறது. நம்மில் பல பேருக்கும்
நாம் அறியாத நம் அக்கம்பக்கத்தினரையும்
அவர்களுடைய கனிவான முகத்தையும் அறிமுகம்
செய்திருக்கிறது. சென்னைக்கு என ஒரு குணம்
உண்டு. அது இந்த வெள்ளத்தில்
அதீதமாக வெளிப்பட்டிருக்கிறது. அந்தக் குணத்தை சென்னையில்
வாழும் நாம் ஒவ்வொரும் கைகொள்வோம்...
எந்தப் பேரிடரையும் வெல்வோம்!
-பொறியாளர் கோ. சுந்தர்ராஜன்
நன்றி: ஆனந்தவிகடன்
No comments:
Post a Comment