ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர்
என்ற ஒருவர் வந்திருந்தார். அவர்
சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை
போல யாரும் புலமை பெற்றவர்
இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர்.
அதனால் ஒவ்வொரு ஊராக சென்று
அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று,
பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும்
வந்தார்.
அவர் இராயரின் அவைக்கு வந்து தன்
திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா,
சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள்.
அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு
அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது
கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள்
இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.
அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து
"பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான்
தயார். இன்று போய் நாளை
வாருங்கள்" என்றான்.
இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக
இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக
பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால்
வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும்
இருந்தது.
மறுநாள்
இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற
விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர்.
இராமன் தன் கையில் பட்டுத்துணியால்
சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான்.
வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார்.
அது என்னவாக இருக்கமுடியும்? என்று
அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே "ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே!
அது என்ன? " என்று கேட்டார்.
இராமன்
அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக "இது திலாஷ்ட மகிஷ
பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான்
உம்மிடம் வாதிடப்போகிறேன்!" என்றான்.
வித்யாசாகருக்கு
குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை
எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார்.
ஆனால் இராமன் கூறியது போல்
ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த
நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு
தம்மால் பதில் சொல்ல முடியுமோ?
முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது.
அதனால் நயமாக "வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்"
என்று சொல்லிவிட்டு சென்றார்.
அன்றிரவு
வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார்.
இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள
முடியாத நூலாக இருந்தது. இதுவரை
தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி
அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே
சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.
மறுநாள்
அனைவரும் வந்து கூடினர். ஆனால்
வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே
ஊரை விட்டு ஓடி விட்டார்
என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை
வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர்.
மன்னர்
இராமனிடம் "இராமா! நீ வைத்திருக்கும்
திலகாஷ்ட மகிஷ பந்த என்ற
நூலை பற்றி நானும் இதுவரை
கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!"
என்றார்.
இராமன்
மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை.
அதற்கு பதிலாக எள், விறகு,
எருமையை கட்டும் கயிறு இருந்தது.
அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.
இராமன்,
"அரசே! திலகம் என்றால் எள்,
காஷ்டம் என்றால் விறகு, மகிஷ
பந்தனம் என்றால் எருமை கட்டும்
கயிறு. இதன உட்பொருளை வைத்து
தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து
கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்"
என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி
பரிசளித்தார்.
No comments:
Post a Comment