மன்னர்
கிருஷ்ணதேவராயருக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது.
எப்போது பார்த்தாலும் தனது
புத்திக்கூர்மையால் அனைவரையும் சிரிக்க வைத்து
விடுகிறானே இந்த தெனாலிராமன்.
இவனை எப்படியும் மட்டம்
தட்ட வேண்டும் என்று எண்ணினார். அதன்படியே செயல்படத் தொடங்கினார்.
ஒருநாள்
அரசவை கூடியது. அப்போது தெனாலிராமனை
அருகில் அழைத்தார் மன்னர்.
தெனாலிராமா, ''நேற்று இரவு நான்
தூங்கும் போது ஒரு கனவு
கண்டேன்'' என்றார் மன்னர்.
உடனே தெனாலிராமன் ''அது
என்ன கனவு'' என்று கேட்டான்.
அதற்கு
மன்னர் ''வழக்கம்போல் நாம்
இருவரும் உலாவச் சென்றோம்.
அப்போது எதிர்பாராதவிதமாக நான்
தேன் நிறைந்த குழியிலும்
நீ சாக்கடையிலும் விழுந்து
விட்டோம்'' என்றார். இதைக் கேட்டதும் அரசவையில் உள்ளோர்
அனைவரும் தெனாலிராமனைப் பார்த்து கேலியாகச்
சிரித்தனர்.
எல்லோரும் சிரிப்பதைப்
பார்த்ததும் தெனாலிராமனுக்கு கோபம் ஏற்பட்டது. இருப்பினும்
அடக்கிக் கொண்டான். அரசரை எப்படியும்
மட்டம் தட்டியே தீருவது
எனக் கங்கணம் கட்டிக் கொண்டான்.
மறுபடியும் மன்னர் சொன்னார், ''நான்
தேன் குழியிலிருந்து எழுந்து விட்டேன்.
நீயோ அதிலிருந்து கரையேற முடியாமல்
தவித்துக் கொண்டிருந்தாய்'' என்றார்.
அதைக் கேட்ட தெனாலிராமன்
அதன் பின் என்ன நடந்தது
என்று கேட்டான். அதற்குள் நான் விழித்துக் கொண்டேன் என்றார் மன்னர்.
மறுநாள் அரசவைக் கூடியதும்
தெனாலிராமன் வந்தான்.
மன்னரைப் பார்த்து,''மன்னர்
பெருமானே தாங்கள் கனவு
கண்டதாக சொன்னீர்களே, அதன் மீதியை நான் நேற்று
இரவு கனாக் கண்டேன்''
என்றான். அதைக் கேட்டதும்
மன்னர் கனவு எப்படி இருந்தது
என்றார்.
'' தாங்கள்
தேன் குழியிலிருந்து கரையேறி
நின்றீர்களா? நானும் எப்படியோ
அந்தச் சாக்கடைக் குழியிலிருந்து
கரையேறி
விட்டேன். இவ்விஷயம் மற்றவர்களுக்குத்
தெரியாமல் இருப்பதற்காக நான் உங்களை
என் நாவால் நக்கி சுத்தப்படுத்தி
விட்டேன். நான் செய்தது
போலவே நீங்களும் என்னை தங்கள் நாக்கால்
நக்கி சுத்தப்படுத்தினீர்கள்'' என்றான் தெனாலிராமன்.
இவ்வார்த்தைகளைக் கேட்டதும்
மன்னர் சிறிது அதிர்ச்சியுற்றாலும் தெனாலிராமனின் சாமர்த்தியத்தை எண்ணி மனமாரப்
பாராட்டினார்.
No comments:
Post a Comment