சிந்துபாத் என்பவன் ஒரு சிறந்த மாலுமி. கடல் பயணம் செய்து எண்ணற்ற புதிய அனுபவங்களை கண்டுகளிப்பவன். அவன் கடலில் ஏற்படும் அபாயங்களைத் தன் துணிகரச் செயல்களால்
கடந்து வருவான். அவன் ஒருமுறை கடல் வழிப் பயணம் சென்றபோது, ஒரு
திமிங்கலம் அவனது கப்பலைத் தலை கீழாகக் கவிழ்த்துவிட்டது. சிந்துபாத்
அப்போது ஒரு சிறிய,
உடைந்த மரத்துண்டின் மீது ஏறி கரை சேர்ந்தான்.
சிந்துபாத், தான் ஒரு அற்புதமான இடத்தில் கரைசேர்ந்து இருப்பதைக்
கண்டான். வெண்மையான, மென்மையான
பெரிய கற்கள் அங்குக் காணப்பட்டன. அவன் ஒரு கல்லை
அருகில் சென்று பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெரிய பறவை ஒரு கல்லின் மீது வந்து
இறங்கியதைப் பார்த்தான்.
சிந்துபாத் அதிர்ச்சி அடைந்தான். தான் வந்து
இறங்கிய இடம் ராட்சதப் பறவைகள் வாழும் இடம்; வெள்ளைக்கற்கள்
போல் தோன்றியவை உண்மையில் அந்தப் பறவையின் முட்டைகள் என்று அறிந்தான்.
சிந்துபாத்திற்கு உடனடியாக ஒரு யோசனை தோன்றியது. அவன் தன் மேல் துணியைப் பற்றி இழுத்து, பறவையின்
கால்களுடன் சேர்த்துக் கட்டிக் கொண்டான். அந்தப் பறவை
சிந்துபாத்தையும் தூக்கிக் கொண்டு வானத்தில் பறந்தது. அது ஒரு பள்ளத்தாக்கில் இறங்கியதும், சிந்துபாத்
தன்னை விடுவித்துக் கொண்டான்.
அது வைரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கு. அங்கே
உள்ளவர்கள் மாமிசத் துண்டுகளை மேலே இருந்து கீழே போட்டனர். கழுகுகள் பறந்து வந்து அந்தத் துண்டுகளை எடுத்துச் சென்றன. இந்தப் பள்ளத்தாக்கு மக்களைப் பற்றிய கதைகள், அவன்
ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தான். அவர்கள் மாமிசத்
துண்டுகளைக் கீழே போட்டதும், அதில் வைரங்கள் ஒட்டிக்கொள்ளும். கழுகுகள் அவற்றைத் தங்களுடைய காட்டிற்கு எடுத்துச் செல்லும். அங்கு அந்த மனிதர்கள் வைரங்களை எடுத்துக் கொண்டு, மாமிசத்தைக்
கழுகுக்கு விட்டுவிடுவர்.
ஒரு கழுகு சிந்துபாத்திற்கு வெகு அருகில் வந்ததும், அவன் அதன் கால்களைப் பற்றிக் கொண்டான். ஆச்சரியமடைந்த கழுகு வானில் உயரே பறந்தது. சிந்துபாத்தும் அந்தக் கழுகின் கால்களைப் பிடித்துக் கொண்டே
போய், பள்ளத்தாக்கின் மத்தியில் மக்கள் நடுவே சென்று இறங்கினான். அந்த மக்கள் வானிலிருந்து அவன் கீழே விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
சிந்துபாத் அவர்களுக்கு நடந்தவற்றை விவரித்தான். அவர்கள் அவனுக்கு ஒரு படகு அளித்து உதவினர். அவன் தனது துணிகரமான பயணத்தை வெற்றிகரமாகத் துவங்கினான்.
நீதி: துணிவே துணை
No comments:
Post a Comment